1. கடவுள் வாழ்த்து

நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள்  நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று

 2. கல்வியின் சிறப்பு

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும்  உறும் கவல் ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை 

3. கல்வியின் இன்பம்

தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது 

4. அவையை அழகுபடுத்தும் கல்வி

கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீங்கவியாச்  சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு 

5. கல்வியும் உய்த்து உணர்வும்

எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து
உய்த்து உணர்வு இல் எனின் இல் ஆகும்  உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்று எனின் என்னாம் அஃது உண்டேல்
பொன் மலர் நாற்றம் உடைத்து 

6. அவை அஞ்சுவார் கல்வி

அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும்  நவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்
பூத்தலின் பூவாமை நன்று 

7. புலவர் புகழ் உடம்பு

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான்மலரவன்செய்
வெற்று உடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு 

8. அவையத்து உதவாதார் கல்வி

நெடும்பகற் கற்ற அவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி  கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால் 

9. கற்றன ஓம்புதல்

வருந்தித்தாங் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல்  கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு
எய்த்துப் பொருள்செய் திடல் 

10. வறிஞர் கல்வி

எனைத்துணைய வேனும் இலம்பாட்டார் கல்வி
திணைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம்  மனைத்தக்காள்
மாண்பில ளாயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல் 

11. செல்வரைச் சேர்தல்

இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா  என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுக்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற 

12. நோற்றார் பெருமை

இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றவேல் செய்ப  பெரிதுந்தாம்
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று 

13. கல்வியழகே யழகு

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம்  முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார் 

14. கல்விச் செருக்கால் பயனில்லை

முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉங்
கற்றனம் என்று களியற்க  சிற்றுளியால்
கல்லுந் தகருங் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால் 

15. அகமகிழ்வும் செருக்கழிவும்

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க  தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று 

16. தாழ்ந்தாரிடந் தாழ்தல்

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும்  இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமுந்
தலைவணங்கித் தாழப் பெரின் 

17. தாழாதாரிடத்துந் தாழ்தல்

ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப  தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலைக்கு 

18. நலத்தகையார் தற்புகழ்ச்சி

விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையுந் தீதே புலப்பகையை
வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின் 

19. தற்புகழ்ச்சியின் இழிவு

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால்  தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம் 

20. பிறர் நன்மதிப்புறல்

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு  பிறர்பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல் 

21. கற்றபடி ஒழுகல்

கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை  சொற்றநீர்
நில்லாததென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல் 

22. நரகஞ்செல் புலவர்

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்
தமக்குப் பயன்வே றுடையார்  திறப்படூஉந்
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலை கொளல் 

23. கல்லாதார் அவையடங்காமை

கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்
கொற்கமின் றூத்தைவாய் அங்காத்தல்  மற்றுத்தம்
வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை
புல்லுரு அஞ்சுவ போல் 

24. கல்விசேர் இயல்பினர்

போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா  தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில் 

25. கற்றவர் கல்லாதவர் இயல்பறிதல்

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
குற்றந் தமதே பிறிதன்று  முற்றுணர்ந்தும்
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவன் 

26. நன்மக்கள் மாட்சி

வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார்  மாத்தகைய
அந்தப் புரத்ததுபூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கைக் களிறு 

27. தெய்வம் இவரெனல்

குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையுந் தாயும்  அறவோர்க்
கடிகளே தெய்வம் அனைவோர்க்குந் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை 

28. குடியோம்பல்

கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினுந்  தண்ணளியான்
மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்
றென்பயக்கும் ஆணல் லவர்க்கு 

29. வரிவாங்கும் முறை

குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால்கொளலும் மாண்பே  குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல 

30. அரசனாகான் இயல்பு

இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான்  சென்றொருவன்
ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தும் அலன் 

31. அரசபோக மயக்கம்

முடிப்ப முடித்துப்பின் பூசுவபூசி
உடுப்ப உடுத்துண்ப உண்ணா  இடித்திடித்துக்
கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் 

32. செங்கோன்மை

ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்தும்  குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று 

33. அரசன் பேரறிவு

ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு  நேர்நின்று
காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை
சால்புடைத் தென்பாரு முண்டு 

34. மூடர் கேடறியாமை

கண்கூடப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்
குண்டோ உணர்ச்சிமற் றில்லாகும்  மண்டெரி
தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து 

35. கேட்டின் குறி

நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல்  தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி 

36. பெரியாரைப் பிழைத்தல்

பணியப் படுவார் புறங்கடைய ராகத்
தணிவில் களிப்பினால் தாழ்வகர்க்  கணிய
திளையாள் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள்
தொலையாத போகங் கொளல் 

37. சான்றாண்மை

கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா  வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு 

38. செல்வரின் ஈகைப்பயன்

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா  ஆங்கதுகொண்
டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று 

39. அரசன் நன்மதிப்பு

மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய  மாகொல்
பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும்
நகைமு கத்த நன்கு மதிப்பு 

40. அடைக்கலங் காத்தல்

களைகாணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர்
விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார்  தளர்நடைய
தூனுடம் பெள்று புகழுடம்பு ஒம்புதற்கே
தானுடம் பட்டார்கள் தாம் 

41. மான வலியின் உயர்வு

தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக  பின்னர்ச்
சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்
கிறுவரை யில்லை யெனின் 

42. மானங் காப்பவர்

கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து
புலனொருங்கப் பொய்யொழிந் தாரும்  கொலைஞாட்பின்
மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண்மறலி
தும்பை முடிசூ டினும் 

43. மெய்ப்பயனுடையார் இறத்தற் கஞ்சார்

புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்
கழிமுடை நாற்றத்த வேனும்  விழலர்
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
சுளியார் சுமைபோடு தற்கு 

44. மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப  இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை 

45. அமைச்சரியல்பு

செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா  கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு 

46. அரசனை அடுத்தொழுகுமாறு

கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த
செவ்வி தெரியா துரையற்க  ஒவ்வொருகால்
எண்மைய னேனும் அரியன் பெரிதம்மா
கண்ணிலன் உள்வெயர்ப்பி னான் 

47. அரசன் வெகுளி

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார்  வெகுளின்மன்
காதன்மை உண்டே இறைமாண்டார்க்கு ஏதிலரும்
ஆர்வலரும் இல்லை அவர்க்கு 

48. மன்னர் புறங்கடை காத்தல்

மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க  பன்னெடுநாள்
காத்தவை எல்லாம் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செய்யும் 

 49. இறுவரைகாறும் முயலல்

உறுதி பயப்பக் கடைபோகா வேனும்
இறுவரை காறும் முயல்ப  இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில 

50. முயற்சி செய்யாமை

முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறந்த என்னார்  மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்று
ஏற்றார் எறிகால் முகத்து 

51. முயற்சியால் விதியையும் வெல்லல்

உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே  உலகறியப்
பால்முளை தின்று மறலி உயிர்குடித்த
காளைமுளையே போலுங் கரி 

52. தெரிந்து முயலுதல்

காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து  மேலும்தாம்
சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும் 

53. கருமங் கண்ணாயினார் செயல்

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்  செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் 

54. சிறுபகை ஓம்பல்

சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபா டுடையர்  நிறைகயத்து
ஆழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும்
யானை நிழல்காண் பரிது 

55. உட்பகை அச்சம்

புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப  அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை 

56. கூடா நட்பு

புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு வேறாதல் வேண்டும்  கழிபெருங்
கண்ணோட்டம் செய்யார் கருவியிட் டாற்றுவார்
புண்வைத்து மூடார் பொதிந்து 

57. தீ நட்பு

நட்பிடைக் குய்யம்வைத்து எய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றாக்குத்  திட்பமாம்
நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து 

58. மனநலத்துக்கான செயல்

மனத்த கறுப்பெனின் நல்ல செயினு
அனைத்தெவையுந் தீயவே யாகும்  எனைத்துணையுந்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே
மாசில் மனத்தி னவர் 

59. இனியவர் வன்சொல்லும் இனிதே

இனியவர் எனசொலினும் இன்சொல்லே இன்னார்
கனியும் மொழியும் கடுவே  அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும் மெய்பொடிப்பச்
சிங்கி குளிர்ந்துங் கொலும் 

60. நல்லாறு

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து  மெய்யிற்
புலமைந்துங் காத்து மனமாசு அகற்றும்
நலமன்றே நல்லாறு எனல் 

61. நல்லார் அல்லன செய்யார்

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார்  பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ் 

62. முதன்மையாக ஓம்பவேண்டியவை

குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திருவும்  தவம்விற்றாங்கு
ஊனோம்பும் வாழ்வும் உரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்தல் தலை 

63. வஞ்சகர் செல்வம்

இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம்மடநல்லார்
பொம்மன் முலைபோல் பருத்திடினும் மற்றவர்
நுண்ணிடைபோல் தேய்ந்து விடும் 

64. பெற்றதைவிட்டுப் பெறாததை விரும்பல்

பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிதம்மா  முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா 

65. அறத்தாற்றிற் பொருளீட்டல்

தத்தம் நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி  எய்த்தும்
அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடைய தாகும் பொருள் 

66. செல்வத்தின் வகை

பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குறமகளே ஏனையோர் செல்வம்கலனழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயாா
செல்வம் பயன்படுவ தில் 

67. ஈயாதார் செல்வம்

வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல  கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான் 

68. இன்சொல்

ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஓ கொடி கொடிதம்மா  நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா இவரென்செய் வார் 

69. சொல்வன்மைப் பயன்

சொல்வன்மை உண்டெனிற்கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின்வேறல்ல  வல்லைத்தம்
ஆக்கங்கெடுவ துளதெனினும்அஞ்சுபவோ
வாக்கின்பயன்கொள் பவர் 

70. சிறுமுயற்சிப் பெரும்பயன்

சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்
பெறுமெனில் தாழ்வரோ தாழார்  அறனல்ல
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்
ஒண்மையில் தீர்ந்தொழுக லார் 

71. நாகரிகம் இல்லாதவர்

செயக்கடவ அல்லனவுஞ் செய்துமன் னென்பார்
நயத்தகு நாகரிகம் என்னாம்  செயிர்த்துரைப்பின்
நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்
எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று 

72. அடக்கம் இல்லாதார்

அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண்
டொல்லாதார் வாய்விட் டுலம்புப  வல்லார்
பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங்
கறிமடம் பூண்டுநிற் பாரஞ் 

73. பயன் கூறுவோர்

பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
நகையொன்றே நன்பயனாக் கொள்வான்  பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்
கைவிதிர்த் தஞ்சப்படும் 

74. தெய்வத் தண்டனை

தெய்வ முளதென்பார் தீய செயப்புகின்
தெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும்  தெய்வம்
இலதென்பார்க் கில்லைத்தம் இன்புதல்வர்க் கன்றே
பலகாலும் சொல்வார் பயன் 

75. தீயன தீயனவே

தீய செயற்செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல  தீயன
நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக்
கொல்லுங் கவயமாப் போல் 

76. பழி நாணுவோர்

நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரின் கீழல்லர்  முன்னைத்தம்
ஊழ்வலி உன்னிப் பழிநாணி உள்ளுடைவார்
தீய செயினுஞ் சில 

77. பிறர்மனை நயத்தல்

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே ஆயினுமாக  சிறுவரையும்
நன்னலத்த தாயிணுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய் 

78. நல்லின்பம்

கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
தருமமுந் தாழ்வு படாமே  பெரிதுந்தம்
இன்னலமுங் குன்றாமே ஏரிளங் கொம்பன்னார்
நன்னலந் துய்த்தல் நலம் 

79. காமிகள் செய்கை

கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்
களவொன்றோ ஏனையவுஞ் செய்வார்  பழியோடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார் 

80. தூர்த்தர் இயல்பு

திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும்
பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பார்  நறுவிய
வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கிற் சிலர் 

81. மக்கட் பேறு

கற்புடுத் தன்பு முடித்து நாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு  மக்கட்பே
றென்பதோ ராக்கமும் உண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு 

82. மகளிர் மனம்

ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்  வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மேல் ஆகும் மனம் 

83. கற்பில்லாத மகளிர்

கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர்  மற்றுத்தம்
கேள்வர்க்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளைஞர்
யாவர்க்கும் கேடுசூ ழார் 

84. கற்பில்லா மகளிரின் பிறப்பு

முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடுநாணும் பேணார் பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு 

85. துறவியர் காம நோக்குறாமை

பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார்
கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார்  பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார் 

86. துறவிகளின் உணவு

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற் சுவையின் ஆகுவவென் றெண்ணி  அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர் 

87. துறவிகள் உடம்போம்பாமை

அன்பொ டருளுடைய ரேனும் உயிர்நிலைமற்
றென்பியக்கங் கண்டும் புறந்தார்  புன்புலாற்
பொய்க்குடில் ஓம்புவரோ போதத்தால் தாம்வேய்ந்த
புக்கில் குடிபுகுது வார் 

88. சிற்றின்பம் விரும்பாமை

சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப  முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில் 

89. இணவிழைச்சு அகற்றல்

எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன் றில்லெனின்
தெவ்வுந் திசைநோக்கி கைதொழூஉம்  அவ்வினை
காத்த லிலரேல் எனைத்துணைய ராயினும்
தூர்த்தருந் தூர்ப்பார் அலர் 

90. பேதையர் செயல்

பரபரப்பி னோடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப  ஒருவாற்றான்
நல்லாற்றில் நூக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர் 

91. தவம்

இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்டாரும்
தாழாமே நோற்பார் தவம் 

92. தவத்தின் இயல்பு

நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றிற் கொண்டுய்க்கும்  எல்லி
வியனெறிச் செல்வாரை ஆறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல் 

93. கூடாவொழுக்கம்

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே  கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது 

94. வஞ்சித்தொழுகல்

வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின்  வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவ தறிவு 

95. பழிமொழி பரத்தல்

மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம்
பறையறைந்தாங் கோடிப் பரக்கும்  கழிமுடைப்
புன்புலால் நாற்றம் புறம்பொதிந்து மூடினுஞ்
சென்றுதைக்கும் சேயார் முகத்து 

96. மேலோர் செயல்

மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார் மற்றொன்றானும் உய்யார்  நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற 

97. தீயவையும் நல்லவையே

இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லால்  பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி ஊன்றின் பவர் 

98. ஞானி செயல்

எவரெவர் எத்திறத்தார் அத்திறத்த ராய்நின்
றவரவர்க் காவன கூறி  எவரெவர்க்கும்
உப்பாலாய் நிறபமற் றெம்முடையார் தம்முடையான்
எப்பாலு நிற்ப தென 

99. மெய்யுணர்ந்தார்

மெய்யுணர்ந்தார் பொய்ம்மேல் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலங்காப்பார்  மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாய் பழிநாணல் நீள்கதவாச்
சேர்ப்பர் நிறைத்தாழ் செறித்து 

100. பேரின்பம்

கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல்  முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்தவெலாம் துன்பமலா தில் 

101. நீணெறிச் சென்றார்

கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டி மனந்திருத்திப்  பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச்சென் றார் 

102. முடிபொருள்

ஐயந் திரிபின் றளந்துத் தியில்தெளிந்து
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார்  தம்முளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள் 

                                          -    குமரகுருபரர்