துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
வேண்டிய எல்லாந் தரும்
மு.வ உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக்
கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம்
விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
கலைஞர் உரை:
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை
பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்
குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
நன்றி பயவா வினை
மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற)
செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும்
தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
கலைஞர் உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற
செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்
குறள் 653:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்
ஆஅது மென்னு மவர்
மு.வ உரை:
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி
முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம்
வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கலைஞர் உரை:
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென
விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட
வேண்டும்
குறள் 654:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
நடுக்கற்ற காட்சி யவர்
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில்
சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச்
செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர்
தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள்
துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்
குறள் 655:
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
மற்றன்ன செய்யாமை நன்று
மு.வ உரை:
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச்
செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத்
தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும்
படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும்
அதைச் செய்யாது இருப்பது நல்லது.
கலைஞர் உரை:
`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக்
கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து
விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
சான்றோர் பழிக்கும் வினை
மு.வ உரை:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த
நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும்
அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
கலைஞர் உரை:
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத்
தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது
குறள் 657:
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
கழிநல் குரவே தலை
மு.வ உரை:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும்
செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே
சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும்,
பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து
செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக
வாழ்வதே மேலானதாகும்
குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
முடிந்தாலும் பீழை தரும்
மு.வ உரை:
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல்
மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத்
தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.
கலைஞர் உரை:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல்
செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்
குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
பிற்பயக்கும் நற்பா லவை
மு.வ உரை:
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம்
பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும்
பிறகு பயன் தரும்
சாலமன் பாப்பையா உரை:
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள்
எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம்
இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
கலைஞர் உரை:
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும்
நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்
குறள் 660:
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
மு.வ உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக்
காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக்
காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
கலைஞர் உரை:
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக்
காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப்
பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்
0 Comments