
தற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளில் (வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும்) இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் (பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்) புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும்,பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது.
தமிழ் எழுத்துகள்
உயிரெழுத்துகள் – பன்னிரண்டு – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
உயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை "குறில்கள்" என்றும்.
கூடிய ஒலிப்பளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் எழுத்துகள் "நெடில்கள்" என்றும். குறிக்கப்படுகின்றன.
ஐ, ஔ என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே அ + இ, அ + ஒ என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புக்களைக் குறிக்கின்றன.
தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும்,ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் எ என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் ஒ என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடன்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக எ என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப் பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் சேர்த்து இப்போது ஏ என எழுதப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐ, ஔ ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மெய்யெழுத்துகள் – பதினெட்டு – க், ங், ச், ஞ், ட்,,ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.
வல்லினம் | மெல்லினம் | இடையினம் |
க் | ங் | ய் |
ச் | ஞ் | ர் |
ட் | ண் | ல் |
த் | ந் | வ் |
ப் | ம் | ழ் |
ற் | ன் | ள் |
உயிர்மெய்யெழுத்துகள் – 12 X 18 = 216
உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
உயிர் → | அ | ஆ | இ | ஈ | உ | ஊ |
மெய்↓ | ||||||
க் | க | கா | கி | கீ | கு | கூ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ |
த் | த | தா | தி | தீ | து | தூ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ |
உயிர் → | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
மெய்↓ | ||||||
க் | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
ஆய்த எழுத்து – ஒன்று – ஃ
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
தமிழ் எண்கள்
தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
நாள் | மாதம் | வருடம் |
௳ | ௴ | ௵ |
செலவு | வரவு | மேலேயுள்ளபடி | ரூபாய் | இலக்கம் |
௶ | ௷ | ௸ | ௹ | ௺ |
தமிழில் கிரந்த எழுத்துகள்
தமிழில் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் (மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இது தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது) பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
0 Comments